Thursday, October 30, 2008

செல்வேந்திரன் இடுகைகள்

விரிப்போட்டார் தெரு

"அது என்னங்க 'விரிப்போட்டார் தெரு'ன்னு ஒரு தெரு. என்ன அர்த்தம்?!" என்றாள் கேண்டி. பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு எப்பாடு பட்டாவது விடை கண்டுபிடித்துச் சொல்வது ஆண்வர்க்கத்தின் புராண காலப் பழக்கம் என்பதால் நானும் விடை தேடிப் புறப்பட்டேன்.


சிலப்பதிகாரத்தில் கோவலனின் தந்தை மாநாய்கன். கண்ணகியின் தந்தை மாசாத்துவான். மாநாய்கன் என்றால் திரைகடல் ஓடி திரவியம் தேடும் வணிகன். மாசாத்துவான் என்றால் தரைவழி வாணிகம் புரிபவன் என்று பொருள். இவர்கள் வாணியச் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே வரலாற்று ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை சாத்தான்குளத்தில் வாணிய செட்டியார் என்றழைக்கப்படும் செட்டிமார்களின் குடும்பங்கள் சுமார் 3000 இருந்துள்ளது. அதன் அடையாளமாகத்தான் இன்றளவும் செக்கடி, செக்கடி புதுத்தெரு, செட்டியார் நடுத்தெரு, அருணாசலம் செட்டியார் காம்பவுண்டு, செட்டியார் மேலத் தெரு, செட்டியார் கீழத்தெரு, ஆறுமுகம் செட்டியார் காம்பவுண்டு போன்ற பலத் தெருக்கள் இருக்கின்றன.

செட்டியார்களின் குலத்தொழில் வணிகம். சாத்தான்குளத்துச் செட்டிமார்களும் கடல் மற்றும் தரை வழி வணிகத்தில் கோலோச்சி இருந்திருக்கின்றனர். தரைவழி வணிகம் புரிபவர்கள் வியாபாரத்திற்காகப் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்குச் செல்கையில் பொதிமாடுகளைப் பயன்படுத்தி உள்ளனர். அப்படிப் பயன்படுத்தும் பொதிமாடுகளின் முதுகில் பொருட்களின் சுமை அழுத்தாமல் இருக்க 'விரி' என்ற அழைக்கப்படும் மெல்லிய மெத்தைப் போன்ற விரிப்புகளை பயன்படுத்தி உள்ளனர். அந்த விரியை பெருமளவில் உற்பத்தி செய்பவர்கள் இருந்து வந்த தெருவே விரிப்போட்டார் தெரு என்றழைக்கப்பட்டு வந்துள்ளது. என்று அவளுக்கு விளக்கி முடித்தேன். 'ஏன்யா ஒரு பேச்சுக்கு கேட்டா இப்படியாய்யா சிலப்பதிகாரம், சீவசிந்தாமணின்னு மொக்கய போடுவ' என்றாள் கேண்டி.

No comments:

Post a Comment